விருதுநகர்: காரியாபட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் அவரது மகன் உட்பட பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (45). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். முருகன் தனது கிராமத்தில் ஆடு மேய்ப்பதோடு விவசாயமும் செய்து வந்தார். கடந்த வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஊருக்கு அருகே உள்ள ஒரு தோட்டக் கிணற்றில் சாக்கு மூட்டையில் கால் வெளியே தெரியும் நிலையில் உடல் மிதப்பதைப் பார்த்த அப்பகுதியினர் போலீஸாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு காரியாபட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை வெளியே எடுத்துப் பார்த்தனர். அதில், முருகனின் உடல் இருந்தது.
இது குறித்து ஆவியூர் போலீஸார் நடத்திய விசாரணையில், முருகனை கொலை செய்தது அவரது மகன் தவமணி (24) என்பது தெரியவந்து. அவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்ததில், தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முருகன் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்து தனது நண்பரான அபுபக்கர் (26) என்பவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தவமணியையும் அபுபக்கரையும் ஆவியூர் போலீஸார் கைது செய்தனர்.