கஞ்சா போதையில் அடிக்கடி தகராறு: வாணியம்பாடியில் மகனை அடித்துக்கொன்ற தந்தை கைது


திருப்பத்தூர்: வாணியம்பாடியில் மகனை அடித்துக் கொன்ற தந்தையைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (56). இவர் வாணியம்பாடி புறவழிச்சாலையில் வாகனங்களுக்குப் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீதர் (27). இவர், வேலைக்குச் செல்லாமல் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கஞ்சா பழக்கத்துக்கு ஆளான ஸ்ரீதர் அடிக்கடி கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், தந்தை - மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முருகேசன் மற்றும் ஸ்ரீதர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த முருகேசன் வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் கரண்டியை எடுத்து ஸ்ரீதரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், ஸ்ரீதர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி நகரக் காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஸ்ரீதர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மகனைக் கொலை செய்த தந்தை முருகேசனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x