புதையல் எடுத்துத் தருவதாக ஓசூர் அருகே பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி: 9 பேர் கும்பல் கைது


கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே வீட்டின் அருகே புதையல் இருப்பதாகவும், எடுத்துத் தருவதாகவும் கூறிப் பெண்ணிடம் ரூ.8 லட்சம் ஏமாற்றிய 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஓசூர் அருகே சாந்தபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ராதாம்மா (46). இவரது கணவர் குள்ளப்பா. ராதம்மா தனது வீட்டின் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலை பராமரித்து, பூஜைகள் செய்து வருகிறார். இந்நிலையில், நல்லூர் காவல் நிலையத்தில் ராதாம்மா புகார் அளித்தார். புகாரில், ‘தன்னிடம் ஒரு கும்பல் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.8 லட்சத்தை ஏமாற்றி விட்டடதாக’ தெரிவித்திருந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து, 9 பேரைக் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: ஓசூரில் உள்ள தனியார் விடுதியில் வாஸ்து பூஜைகள் செய்வதாகக் கூறி ஒரு கும்பல் தங்கியுள்ளனர். இக்கும்பலுக்கும், குள்ளபாவின் தம்பி கிஷோருக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இக்கும்பலை கிஷோர் தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார், அக்கும்பல் வீட்டின் அருகே புதையல் இருப்பதாகவும், பூஜை செய்து புதையலை எடுத்துத் தர ரூ.8 லட்சம் செலவாகும் எனக் கூறி ராதாம்மாவிடம் அத்தொகையைப் பெற்றுள்ளனர்.

மேலும், கடந்த 23ம் தேதி ராதாம்மா வீட்டின் அருகே பூஜை செய்து, அக்கும்பலே மறைத்து வைத்திருந்த மண் பானையை எடுத்துள்ளனர். அதில் 2 தங்கக் காசுகள் இருந்துள்ளது. அதில் ஒன்றை ராதாம்மாவிடம் கொடுத்துள்ளனர். மீண்டும் பூஜை செய்து, ஒரு மண் பானையை எடுத்துள்ளனர். இதனிடையே, இப்புதையலை ஒருவர் வாங்க முன் பணமாக ரூ.2.50 கோடி கொடுத்திருப்பதாகக் கூறி ஒரு பெட்டியை அக்கும்பல் ராதாம்மாவிடம் கொடுத்துள்ளனர்.

மண் பானை மற்றும் பெட்டிக்கு 48 நாட்கள் பூஜை செய்து பூஜையின் நிறைவு நாளில் பானை மற்றும் பெட்டியை ஒரே நேரத்தில் திறந்து பார்க்க வேண்டும் எனக் கூறிச் சென்றுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்து பெட்டி மற்றும் பானையை உடைத்துப் பார்த்த போது, அதில் ஒன்றும் இல்லை. இதனால், தான் ஏமாற்றப் பட்டடதை அறிந்து ராதாம்மாள் புகார் அளித்தார்.

இதையடுத்து, ஓசூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அக்கும்பலைச் சேர்ந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் (62), சங்கர் கணேஷ் (43), செல்வராஜ் (61), பழநியைச் சேர்ந்த பிரபாகர் (37), உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சசிகுமார் (48), சேலம் குகையைச் சேர்ந்த ராஜ்குமார் (45), விருத்தாசலத்தைச் சேர்ந்த நடராஜன் (48), முத்து குமரவேல் (48), விஜயவாடாவைச் சேர்ந்த பிரகாஷ் குப்தா (68) ஆகிய 9 பேரைக் கைது செய்துள்ளோம். மேலும் தலைமறைவான 3 பெண்களைத் தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x