ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன, என டிஐஜி சசிமோகன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்த வயதான தம்பதி ராமசாமி - பாக்கியம் கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த தோட்ட வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படாததால், குற்றவாளிகளை கண்டறிவதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, பல்லடம் மற்றும் சென்னிமலை பகுதியில் இதே போன்ற கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களின் போது, முதலில் வளர்ப்பு நாய் கொல்லப்பட்டுள்ளது. அதே பாணியில் இந்த கொலை சம்பவத்திலும் நடந்துள்ளது.
கொலை சம்பவம் நடந்த பின் கடந்த 3 தினங்களாக போலீசாரின் கட்டுப்பாட்டில் ராமசாமி - பாக்கியம் தம்பதி வசித்த வீடு இருந்து வருகிறது. இங்கு தடயங்களைச் சேகரித்த போலீஸார், வீட்டின் சாவியை ராமசாமியின் மகன் கவிசங்கரிடம் ஒப்படைத்தனர். ஆனால், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை நான் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என அவர் சாவியை போலீஸாரிடமே ஒப்படைத்துள்ளார்.
இதனிடயே சிவகிரியில் டிஐஜி சசிமோகன் கூறியதாவது: சிவகிரி இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பான குற்றவாளிகளைப் பிடிக்க, இரு ஏடிஎஸ்பிக்கள் தலைமையில், 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து காவலர்களைக் கொண்டு, தோட்டங்களி ல் தனியாக உள்ள வீடுகள், முதியவர்கள் உள்ள வீடுகள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பழைய குற்றவாளிகள் பட்டியலைக் கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கண்காணிப்பு கேமரா பதிவுகளும் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பெருந் துறை, கொடுமுடி பகுதியில் காவல் துறையினர் இரு சக்கர வாகன ரோந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தோட்ட வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடற்கூராய்வு அறிக்கை வரும்போது கொலை குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்பதோடு, அது விசாரணைக்கு உதவியாக இருக்கும். 30 நாட்களுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர், என்றார்.