திருநெல்வேலி: கண்டியப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் மலையாண்டி (62). இவரது மகள் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வசித்து வருகிறார். மகளை கணவருடன் சேர்த்து வைக்க மலையாண்டி முயற்சித்து வந்துள்ளார்.
இந்நிலையில், செய்துங்கநல்லூர் அருகே ஆழிகுடியில் உள்ள சுடலை கோயிலில் குறி சொல்லும் ஜோதிடர் மணிகண்டன் (40) என்பவரை மலையாண்டி சந்தித்துள்ளார். அவரிடம், தனது மகளை கணவருடன் சேர்த்து வைக்க ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது மணிகண்டன், உங்கள் மகளுக்கு செய்வினை கோளாறு உள்ளது என்றும், அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறி மலையாண்டியிடம் இருந்து 2,500 ரூபாய் வாங்கியுள்ளார். பரிகார பூஜைக்கு பின்னரும் மகள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால் மலையாண்டி வேதனை அடைந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி டவுன் வடக்கு ரத வீதியில் மணிகண்டன் நின்றதை பார்த்த மலையாண்டி, அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் மணிகண்டன் தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருநெல்வேலி டவுன் போலீஸார் அங்கு சென்று மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, மலையாண்டியை கைது செய்தனர்.