பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே ஆற்று நீரில் மின்சாரத்தை செலுத்தி நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 பேர், ஆற்று நீரில் வழுக்கி விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை அருகே கல்லாற்றில் ஆங்காங்கே தேங்கியுள்ள நீரில் அதிகளவில் மீன்கள் உள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், இரவு நேரங்களில் அங்குள்ள மின்கம்பத்தில் வயர்களை இணைத்து மின்சாரத்தை ஆற்று நீரில் செலுத்தி, மீன்கள் மயங்கி மிதக்கும் போது பிடித்துச் செல்வதை வழக்கமாக செய்து வந்துள்ளனர்.
இதேபோல, தொண்டமாந்துறையைச் சேர்ந்த சேகர் மகன் தினேஷ் குமார் (28), கணேசன் மகன் ரஞ்சித் (25) ஆகிய 2 பேரும் நேற்று அதிகாலை கல்லாற்றின் அருகேயுள்ள மின்கம்பத்தில் இருந்து வயர் மூலம் மின்சாரத்தை ஆற்று நீரில் செலுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக வழுக்கி ஆற்று நீரில் 2 பேரும் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அரும்பாவூர் போலீஸார் சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரின்றனர்.