பெரம்பலூர்: போலி ஆவணம் மூலம் ரூ.1.02 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் சஜ்ஜன் நகர் போலீஸ் காலனியை சேர்ந்தவர் மோகன்சிங் சவுகான் மகன் ஆகாஷ் சவுகான் (29). 2022ம் ஆண்டு முதல் பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு கனரா வங்கிக் கிளையில் நகைக் கடன் பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது, வங்கி வாடிக்கையாளர்கள் 5 பேரின் கணக்கில், நகைக் கடன் பெறுவதற்கான ஆவணங்களை போலியாக தயாரித்து ரூ.1,02,20,000 கையாடல் செய்து, தனது வங்கிக் கணக்கில் செலுத்திக் கொண்டாராம்.
இதனிடையே, வங்கி அலுவலர்கள் ஆவணங்களைப் ஆய்வு செய்த போது ஆகாஷ் சவுகான் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று மோசடி செய்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இது குறித்து நாமக்கல்லில் உள்ள கனரா வங்கி மண்டல அலுவலக உதவிப் பொது மேலாளர் லோக கிருஷ்ண குமார் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆகாஷ் சவுகானை நேற்று கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.