ஊட்டி அருகே காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டை: கேரளாவை சேர்ந்த இருவர் கைது


ஊட்டி அருகே காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 2 பேர் வனத்துறையால் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி அருகே உள்ள கல்லக்கொரை பகுதியில் நேற்று இரவு காட்டு மாடு ஒன்று சாலையில் இறந்து கிடந்தது. இது குறித்து சாலையில் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் காட்டு மாட்டின் உடலை ஆய்வு செய்த போது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து, காட்டு மாடு உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் வந்து, காட்டு மாட்டின் உடலில் இருந்து துப்பாக்கி குண்டுகளை அகற்றி, அதன் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்த தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கேரளா மாநிலம் நிலம்பூர் வழிக்கடவை சேர்ந்த அனீஷ்‌ மோன் (43), நிஷார்‌ (45) ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, ‘காட்டுமாடு வேட்டையாடப்பட்டதா என்ற கோணத்தில்‌ சோதனை சாவடிகளில்‌ வாகன சோதனை செய்யுமாறு தகவல்‌ பகிரப்பட்டது. மேலும்‌ கூடலூரை நோக்கி கேரள மாநில பதிவு கொண்ட வாகனம்‌ அதிவேகமாக செல்வதை கண்ட வனப் பணியாளர்கள், நடுவட்டம்‌ பேருந்து நிலையம்‌ அருகில்‌ அவர்களை பிடித்து, விசாரணைக்காக உதகை அழைத்து வந்தனர். அவர்களை கைது செய்து விசாரணை செய்ததில்‌ இருவரும்‌ குற்றம்‌ செய்ததை ஒப்புக்கொண்டனர்‌, இருவரையும்‌ நீதிமன்றத்தில்‌ ஆஜர்படுத்த மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

x