கூடாநட்பால் விபரீதம் - துபாய் டிராவல்ஸ் உரிமையாளர் கோவையில் கொலை; தலைமறைவான பெண் கைது


கோவை: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணி (48), துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த ஏப்ரல் 21ம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த சிகாமணி கரூர் மாவட்டம் க.பரமத்தியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பீளமேடு போலீஸார் நடத்திய விசாரணையில், காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (69), அவரது மனைவி கோமதி, மகள்கள் சாரதா (32), நிலா, உறவினர் சுவாதி மற்றும் புதியவன் ஆகியோர் சேர்ந்து மது மற்றும் இறைச்சியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. துபாய் ஹோட்டலில் பணியாற்றிய சாரதாவுக்கும், சிகாமணிக்கும் இடையே கூடா நட்பால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளது.

இதையடுத்து கோமதி, நிலா, சுவாதி, கூலிப்படையைச் சேர்ந்த புதியவன் ஆகிய 4 பேரை போலீஸார் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். தலைமறைவான சாரதா துபாய் தப்பி சென்றதும், அங்கு சிகாமணியின் நண்பர்கள், உறவினர்களால் ஆபத்து ஏற்படும் என பயந்து, மீண்டும் கோவை திரும்பி சரவணம்பட்டியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு சாரதாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சிகாமணி கொலை செய்யப்பட்ட இடம் காந்தி மாநகர் பகுதி என்பதால், வழக்கு விசாரணை பீளமேடு காவல் நிலையத்தில் இருந்து சரவணம்பட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

x