தாராபுரம் அருகே சாலைக்காக தோண்டிய குழியில் தவறி விழுந்த தம்பதி உயிரிழப்பு: மகள் படுகாயம்


தாராபுரம்: வெளியூர் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிய போது சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்ததில் கணவன் - மனைவி உயிரிழந்தனர். அவர்களின் மகள் படுகாயம் அடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் சூரியநல்லூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (40) ஆனந்தி (35) தம்பதியினர். அவர்களது மகள் தீக்ஷிதா (15). இவர்கள் மூவரும் குடும்பத்துடன் திருநள்ளாறு கோயிலுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்று விட்டு நேற்று இரவு அவர்களது வீட்டிற்கு திரும்பியுள்ளனர். தாராபுரத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பியவர்கள் குள்ளாய்ப்பாளையம் பாலத்தில் வந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்துள்ளனர். மேலும், பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை குறிக்கும் வகையில் தடுப்புகள் ஏதும் அமைக்கப்படாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் மற்றும் ஆனந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமி தீக்ஷிதா படுகாயங்களுடன் உயிர் தப்பினார். நீண்ட நேரத்துக்கு பின் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

சிறுமி தீஷிதா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். இது குறித்து குண்டடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் இருவருக்கும் தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்த சிறுமிக்கு ரூ.1 லட்சமும் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் மற்றும் துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காயமடைந்த சிறுமிக்கு தேவையான சிறப்பு சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

x