சென்னை: திருமண தரகர் என கூறி, வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த பிரபல கொள்ளைக்காரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர், பக்தவச்சலம் தெருவைச் சேர்ந்தவர் மோகனா (54). இவருக்கு கணவரும், 2 மகன்களும் இருந்தனர். கணவர் இறந்து விட்ட நிலையில், 2 மகன்களும் தற்போது மலேசியா சென்று அங்கு வேலை செய்து வருகின்றனர். இதனால், மோகனா தனியாக வசித்து வருகிறார். மகன்களுக்கு திருமண வயது வந்து விட்டதால், மூத்த மகனுக்கு பெண் தேடி வந்துள்ளார்.
பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் தெரிந்தவர்கள், உறவினர்கள் என பல தரப்பினரிடமும், மகனுக்கு பொறுத்தமான பெண் இருந்தால் தகவல் சொல்லுங்கள் என மோகனா கூறி வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 25-ம் தேதி காலை, பெண் ஒருவர் மோகனாவை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது பெயர் லட்சுமி என்றும் உங்களது மகனுக்கு பெண் பார்த்துள்ளதாகவும், உங்களது முகவரியை கொடுங்கள் என கேட்டு பெற்றுக் கொண்டார்.
பின்னர், சிறிது நேரத்தில் லஷ்மி என்பவர் மோகனாவின் வீட்டுக்குச் சென்று, வரன் தொடர்பாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என இருவரும் ஓய்வெடுத்தனர். பின்னர் மோகனா எழுந்து பார்த்தபோது, லட்சுமி என்று கூறி வந்த பெண்ணைக் காணவில்லை. கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் செல்போனும் காணாமல் போனதைக் கண்டு மோகனா அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னரே தரகர் என கூறி வீட்டுக்கு வந்த பெண் தங்கச் செயின் மற்றும் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த மோகனா இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். தொடர் விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது செங்கல்பட்டு மாவட்டம், ஒட்டியம்பாக்கத்தைச் சேர்ந்த பத்மாவதி (56) என்பதும், இவர் லட்சுமி என்று பொய் கூறியதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக நடைபெற்ற விசாரணையில், கைது செய்யப்பட்ட பத்மாவதி மீது ஏற்கெனவே, ராயபுரம் மற்றும் கொருக்குப்பேட்டை காவல் நிலையங்களில் இதே போல தலா 1 குற்ற வழக்கு உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.