சேலத்தில் மர்மமான முறையில் பெண் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி அன்னலட்சுமி (60). இவர்களது மகள் கலைச்செல்வி, சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் கணவருடன் வசித்து வருகிறார். அன்ன லட்சுமிக்கு உடல் நிலை சரியில்லாததால், மகள் கலைச் செல்வி, கொண்டப்ப நாயக்கன்பட்டி சரஸ்வதி நகரில் வீடு வாடகை எடுத்து தங்கியுள்ளார்.
நேற்று காலை அன்னலட்சுமி தங்கியிருந்த வீட்டில் இருந்து கரும் புகை வெளியானது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் மகள் கலைச்செல்விக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கன்னங்குறிச்சி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்து பார்த்த போது, வீட்டுக்குள் அன்னலட்சுமி உடல் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், அன்னலட்சுமி உடல் நிலை சரியில்லாமல் காலில் கட்டுப் போட்டபடி எழுந்து நடமாட முடியாத வகையில் இருந்துள்ளார்.
படுக்கையில் இருந்தவாறு மின் விசிறி சுவிட்சை ஆன் செய்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, படுக்கையில் தீப்பிடித்து எரிந்ததில் அன்னலட்சுமி உயிரிழந்திருக்க கூடும் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் தடய அறிவியில் நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை செய்து, தடயங்களை சேகரித்துள்ளனர்.