சிவகிரியில் நிகழ்ந்த தம்பதி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தை அடுத்து, திருப்பூர் மாவட்டம் முழுவதும் தோட்டத்துசாளைகள் அமைந்துள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தோட்டத்துசாளைகளில் கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டுவலசு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் உத்தரவின் பேரில் 44 பேர் போலீஸார் அடங்கிய 22 குழுக்கள் அமைக்கப்பட்டு, தோட்டத்துசாளைகள் அமைந்துள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்தியவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிஏபி கால்வாய் வழியாக கொள்ளையர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக போலீஸார் சந்தேகிப்பதால், அந்த பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. அறிமுகம் இல்லாத நபர்கள் யாராவது சுற்றித் திரிந்தால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என பொது மக்களையும், விவசாயிகளையும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.