கோவையில் கொல்லப்பட்ட டிராவல்ஸ் அதிபரின் சடலம் தோண்டியெடுத்து பிரேத பிரிசோதனை


கோவையில் கொல்லப்பட்ட டிராவல்ஸ் அதிபரின் சடலம், நேற்று தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிகாமணி (47). இவருக்கு மனைவி பிரியா, 2 குழந்தைகள் உள்ளனர். சிகாமணி துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். மனைவி மற்றும் குழந்தைகள் தஞ்சாவூரில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த சிகாமணி மாயமானார். இது குறித்து அவரது மனைவி பிரியா கோவை பீளமேடு போலீஸில் புகார் அளித்தார். இதற்கிடையே, கரூர் மாவட்டம் க.பரமத்தியில் சிகாமணியின் சடலம் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சிகாமணியை கொலை செய்ததாக, கடந்த 30ம் தேதி கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைய வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்த போது, துபாயில் வசித்த போது, சிகாமணிக்கும் அங்கு பணியாற்றி வந்த கோவை காந்தி மாநகரைச் சேர்ந்த சாரதா என்பவருக்கும் இடையே தவறான நட்பு ஏற்பட்டது. பண விவகாரத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதும், அதில் சிகாமணி கோபம் அடைந்து சாரதாவை தாக்கியுள்ளார். அதனால் சாரதா, தூத்துக்குடியைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்டோரின் உதவியுடன் சிகாமணியை மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, மயங்கியதும் கொலை செய்து, சடலத்தை கரூரில் வீசிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக தியாக ராஜன் முன்னரே கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய சாரதாவின் தாயார் கோமதி, சகோதரி நிலா, உறவினர் சுவாதி, கூலிப்படையைச் சேர்ந்த குட்டித் தங்கம் என்ற புதியவன் ஆகிய நால்வரையும் நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி சாரதா வெளிநாட்டுக்கு தப்பியது தெரிந்தது.

இதற்கிடையே, கரூர் மாநகராட்சி மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சிகாமணியின் சடலம், க.பரமத்தி வட்டாட்சியர், க.பரமத்தி போலீஸார், பீளமேடு போலீஸார் முன்னிலையில் நேற்று தோண்டியெடு்க்கப் பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சிகாமணியின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் திருவாரூருக்கு எடுத்துச் சென்றனர். இதற்கிடையே, சாரதா வெளி நாட்டில் இருந்து சென்னைக்கு வந்து பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். வெளி நாட்டுக்கு தப்பிச் சென்று விடாமல் இருக்க லுக்அவுட் நோட்டீசும் விமான நிலையங்களில் அளித்துள்ளனர்.

x