சென்னை மெரினாவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனை வளர்ப்பு நாய் கடித்து குதறியது. இது தொடர்பாக நாய் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரினா நடுக்குப்பத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சந்தோஷ் கடந்த 30ம் தேதி மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் இருந்த வளர்ப்பு நாய், சிறுவனை திடீரென கடிக்க துரத்தியது. இதனால், பயத்தில் சிறுவன் ஓடினான். ஆனாலும், அந்த வளர்ப்பு நாய் சிறுவனை விடாமல் துரத்தி சென்று கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற சிறுவன் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். இச்சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் மெரினா போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நாய் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.