தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 பேர் கைது


தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 இளைஞர்களை எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்தனர்.

தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை பயணிகளிடம் 3 இளைஞர்கள் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைக்கண்ட ஆர்பிஎஃப் காவலர், அங்கு சென்று அவர்களை விலக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், ஆர்பிஎஃப் காவலரை தாக்கினர். பிறகு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து, ஆர்பிஎஃப் அலுவலகத்தில் அந்த காவலர் தெரிவித்தார். இதைடுத்து அவர்களைப் பிடிக்க கடற்கரை - தாம்பரம் இடையே உள்ள ரயில்வே காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த 3 இளைஞர்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருப்பதாக, எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, எழும்பூர் ஆர்பிஎஃப் ஆய்வாளர் கே.பி. செபாஸ்டின், மாம்பலம் ஆர்பிஎஃப் ஆய்வாளர் சிவநேசன் தலைமையில் தனிப்படை போலீஸார் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அந்த 3 பேரை பிடிக்க முயன்ற போது, அவர்கள் தப்பித்து ஓடினர் இதையடுத்து, அவர்களை ஆர்பிஎஃப் போலீஸார் துரத்தி பிடித்து கைது செய்தனர்.

பின்னர், ஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்த போது, அவர்கள் பூந்தமல்லியைச் சேர்ந்த கார்த்திக் (25), ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலந்தர் முஸ்தபா (20), சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர்கள் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அரசு ஊழியரை கடமையைச் செய்யவிடாமல் தடுத்து தாக்கியது, பொது மக்களுக்கு இடையூறு செய்தது உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப் பட்டனர். துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த ஆர்பிஎஃப் தனிப்படை போலீஸாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

x