புதுச்சேரி எம்எல்ஏவின் மகன், மருமகள் மீது தாக்குதல்: அரசியல் எதிரிகளால் பாதிப்பு என குற்றச்சாட்டு


புதுச்சேரி: சுயேச்சை எம்எல்ஏ-வின் மகன், மருமகள் மீது தாக்குதல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேருவின் மகன் ரகு என்ற ரகோத்தமன் (29) மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு பாலாஜி தியேட்டர் அருகே சென்றார்.

அப்போது சாலையின் குறுக்கே சரக்கு வாகனத்தை அதன் ஓட்டுநர் நிறுத்தி விட்டு போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரகு கேள்வி கேட்டதால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதனை அங்கிருந்தவர்கள் விலக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ரகு தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் வாகன ஓட்டுநரின் ஆதரவாளர்கள் கும்பலாக திரண்டு, சாந்திநகரில் உள்ள நேரு எம்எல்ஏவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் தரப்பில் போன் மூலம் எம்எல்ஏவை தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது நேரு எம்எல்ஏ, தான் வெளியில் உள்ளதாகவும், வீட்டுக்கு வந்தவுடன் பேசலாம் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வந்த எம்எல்ஏ, தனது மகனை அழைத்து நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளார். அப்போது மீண்டும் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை மோதலாக மாறியுள்ளது. இதில், நேரு எம்எல்ஏ-வின் மகன் ரகு, அவரது மனைவி காயத்ரி ஆகியோரை வாகன ஓட்டுநரின் தரப்பினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தகவலறிந்த எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். வாகன ஓட்டுநர் தரப்பைச் சேர்ந்த ஒருவரை பிடித்த நேரு எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் அவரை போலீஸில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்த உருளையன்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நேரு எம்எல்ஏ கூறுகையில், அரசியல் எதிரிகள் குற்ற பின்னணி உடையவர்களை கையில் வைத்துக்கொண்டு எனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்றார்.

x