பரமக்குடி | பட்டா பெயர் மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தலையாரி கைது


ராசையா

பரமக்குடி: பரமக்குடியில் பட்டா பெயர் மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தலையாரியை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த புகார்தாரர் (பெயர் வெளியிட விரும்பவில்லை) ஒருவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன் லைனில் விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு உரப்புளி கிராம உதவியாளர் (தலையாரி) ராசையா (45), பட்டா பெயர் மாற்ற விண்ணப்பதாரரிடம் தனக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் சேர்த்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அறிவுறுத்தலின்படி, நேற்று பரமக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் கிராம உதவியாளர் ராசையாவிடம் ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவர் கொடுத்தார்.

அந்தப் பணத்தை பெற்ற ராசையாவை, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக, கிராம உதவியாளரிடமும், கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலினுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

x