மதுரை: மதுரை அதிமுக நிர்வாகி கொலையில் 8 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்து உத்தரவிட்டது.
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் அழகர்சாமி. அதிமுக நிர்வாகி. இவரை கடந்த 2014-ம் ஆண்டு கீழவெளி வீதியில் இரவில் ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது. அப்போது அழகர்சாமியை கொலை செய்ய வந்த கும்பலைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்து அவர் அடுத்த 2 நாளில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவங்கள் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் இதே பகுதியைச் சேர்ந்த விஜயலிங்கம், நித்யானந்த், இவரது சகோதரர் சோலைராஜா, ராமசாமி, எம். அலெக்ஸ் பாண்டியன், நீதிராஜன், பி.அலெக்ஸ்பாண்டியன், முனியசாமி, ரஞ்சித்குமார் ஆகியோருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து 2022-ல் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ராமசாமி (சம்பவத்தன்று மைனர் என்பதால் இவரது வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டது) தவிர்த்து மற்ற 8 பேரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.
மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு விசாரித்து, மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், மனுதாரர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டனர்.