கோவை: பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் துபாயில் இருந்து கோவைக்கு அழைத்து வந்து, மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து டிராவல்ஸ் உரிமையாளர் கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிகாமணி (47). இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். மனைவி பிரியா தஞ்சாவூர் புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருகிறார். துபாயில் ஹோட்டலில் பணியாற்றிவரும் கோவை காந்திமா நகரை சேர்ந்த சாரதா (37) என்பவருடன் சிகாமணிக்கு பழக்கம் ஏற்பட்டது.
சிகாமணி கடந்த ஏப்ரல் 21-ம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் கோவை வருவதாக தகவல் கிடைத்தது. மனைவி பிரியா அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பிரியா, கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்நிலையில், கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் சிகாமணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதற்கிடையில், சிகாமணியை கொலை செய்ததாக, கடந்த 30-ம் தேதி கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் சரணடைய வந்த தூத்துக்குடி மாவட்டம் சிவகளையை சேர்ந்த தியாகராஜன் என்பவரை பீளமேடு போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீஸார் கூறியதாவது: துபாயில் சிகாமணியும், சாரதாவும் நெருங்கிப் பழகிவந்த நிலையில், சிகாமணிக்கு கொடுத்த பணத்தை சாரதா திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதுதொடர்பான தகராறில் சிகாமணி, சாரதாவை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாரதா, சிகாமணியை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தியாகராஜன் உதவியை நாடியுள்ளார். தியாகராஜன், ஏற்கெனவே சாரதாவின் கணவர் குணவேல் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி சிகாமணியும், சாரதாவும் துபாயில் இருந்து ஒன்றாக கோவை வந்தனர். கோவையில் தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். சம்பவத்தன்று சாரதாவின் வீட்டில், சிகாமணி, சாரதா, அவரது சகோதரி நிலா, தாய் கோமதி, தியாகராஜன், திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரைச் சேர்ந்த குட்டி தங்கம் என்ற புதியவன் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது, மதுவில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்துள்ளனர். சிகாமணி மயங்கியவுடன் அவரை கொலை செய்து, உடலை காரில் ஏற்றி கரூர் மாவட்டம் க.பரமத்தி செல்லும் காட்டுப் பாதையில் வீசிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, சாரதா, தியாகராஜன், குட்டி தங்கம் என்ற புதியவன், கோமதி, நிலா ஆகிய 5 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, தியாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற நால்வரையும் தேடி வருகிறோம். கைதான தியாகராஜனை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.