பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோ: சென்னையில் நீச்சல் பயிற்சியாளர் கைது 


சென்னை: பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி, சமூக வலைதளங்களில் ஆபாசமான வீடியோ பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஐபோன் உட்பட 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னையை சேர்ந்த 30 வயது பெண்மணி ஒருவர் முதுகலை படித்து வருவதாகவும், தனக்கு நீச்சல் பயிற்சியாளர் பாலாஜி என்பவர் அறிமுகமாகி நண்பராக பழகி வந்த நிலையில், பாலாஜி தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டபோது, தான் மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தனது பெயரில் போலியாக கணக்கு தொடங்கி, தனது ஆபாசமான வீடியோவை பதிவிட்டதாகவும், V-4 ராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி பாலாஜி(39), த/பெ.பாண்டுரங்கன், பழனியம்மன் கோயில் 3வது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு ஐபோன் உட்பட 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரி பாலாஜி விசாரணைக்குப் பின்னர் நேற்று (02.05.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x