திருத்தணி அருகே கணினி பட்டா பரிந்துரைக்க ரூ.75,000 லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது


திருத்தணி: திருத்தணி அருகே சமத்துவபுரத்தில் வசிக்கும் 25 பேருக்கு கணினி பட்டா வழங்க பரிந்துரைக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீரகநல்லூர் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீரகநல்லூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் நூறு குடும்பத்தினர் அனுபவ பட்டா வைத்துள்ளனர். இந்த பட்டாக்களை கணினியில் பதிவேற்றும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வீரகநல்லூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வசிப்போரின் பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்து, கணினி பட்டா வழங்க, வருவாய்த் துறை உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வீரகநல்லூர் கிராம நிர்வாக அலுவலரான திருத்தணியை சேர்ந்த கோட்டீஸ்வரி (47), பட்டா ஒன்றுக்கு ரூ. 5ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சமத்துவபுரத்தில் வசிப்போர் நல சங்க தலைவர் மதுசூதனன்(57), சமீபத்தில் கணினி பட்டா தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரான, திருத்தணி பகுதியை சேர்ந்த கோட்டீஸ்வரியை அணுகினார். அப்போது, சமத்துவபுரத்தில் வசிப்பவர்களில் முதல் கட்டமாக 25 பேருக்கு கணினி பட்டா வழங்க அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க தலா ரூ.3 ஆயிரம் வீதம், ரூ.75 ஆயிரத்தை லஞ்சமாக தனக்கு வழங்கவேண்டும் என, மதுசூதனனிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மதுசூதனன், கிராம நிர்வாக அலுவலர் கோட்டீஸ்வரி மீது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, கோட்டீஸ்வரியை கையும் களவுமாக பிடிக்க திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனையின் படி, இன்று மதியம் வீரகநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர் கோட்டீஸ்வரியிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.75 ஆயிரத்தை லஞ்சமாக மதுசூதனன் அளித்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் திருவள்ளூர் டிஎஸ்பி கணேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், லஞ்சம் வாங்கிய கோட்டீஸ்வரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

x