செஞ்சி அருகே முன்விரோத தகராறு: இளைஞரை கொன்ற பெண் உட்பட 5 பேர் கைது


செஞ்சியில் இளைஞரை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்: செஞ்சி அருகே இளைஞரை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செஞ்சி வட்டம் சிறுகடம்பூர் அருகே வெள்ளக்குளம் கிராமத்தில் வசிப்பவர் சாலமன் (47). இவருக்கும், சிறுகடம்பூர் கிராமத்தில் வசிக்கும் பிரசாந்த் என்பவருக்கும் அடுப்பு கரி சூளைக்கு மர வாங்குவது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், செஞ்சி - நாட்டேரி செல்லும் வழியில் உள்ள பேரூராட்சி கழிவுக் கூடம் அருகே கடந்த ஏப்ரல் 29-ம் தேதி இரவு கரி சூளையில் இருந்த சாலமனை, பிரசாந்த், இவரது மனைவி உஷா, அவரது சகோதரர்கள் மணிகண்டன், மணிமாறன், சின்னதுரை மகன் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.

இதைத் தடுக்க முயன்ற சாலமன் தரப்பைச் சேர்ந்த வெற்றி, மோகன், தமிழ் ஆகியோரும் தாக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த சாலமன் உட்பட 4 பேரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வெற்றி (29), மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

இதையறிந்த வெற்றியின் உறவினர்கள், கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி செஞ்சி கூட்ரோட்டில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையில் தொடர்புள்ள அனைவரும் கைது செய்யப்படுவர் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து செஞ்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரசாந்த் (34), அவரது மனைவி உஷா (29), அவரது சகோதரர்கள் மணிகண்டன் (24), மணிமாறன் (22) மற்றும் சின்னதுரை மகன் மணிகண்டன் (24) ஆகியோரை கைது செய்தனர்.

x