சேலம் மத்திய சிறை: பணம் பெற்று கைதிக்கு செல்போன் வழங்கிய சிறைக்காவலர் பணி நீக்கம்


சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிக்கு செல்போன் வழங்கிய குற்றச்சாட்டில் சிறைக் காவலரை பணி நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மத்திய சிறையில் சிறைக் காவலராக பணியாற்றி வருபவர் சண்முககுமார் (35). இவர் தண்டனை கைதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு கஞ்சா, செல்போன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சண்முககுமார், கைதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு செல்போன் கொடுத்தது உறுதியானது.

இதுதொடர்பாக, அறிக்கை தயாரித்த சிறை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் சிறை கண்காணிப்பாளர் வினோத்துக்கு சமர்ப்பித்தனர். இதையடுத்து, சிறைக் காவலரை தற்காலிக பணி நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தொடர் நடவடிக்கையாக, கைதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு சட்டத்துக்கு புறம்பாக செல்போன் வழங்கியதாக ஜெயிலர் ராஜேந்திரன் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சிறைக் காவலர் சண்முககுமாரை பணி நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டார்.

x