தஞ்சாவூர்: கூட்டுறவு கடன் சங்கத்துக்கு செலுத்த வேண்டிய பணியாளர்களின் தொகையில் ரூ.10.12 கோடிக்கு முறைகேடு செய்துள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிஐடியு தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் கா.அன்பு, தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளது:
தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் பலர், குடும்ப செலவு மற்றும் மருத்துவ தேவைக்காக, மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெறுகின்றனர். அவர்கள் பெறும் கடன் தொகைக்கான அசல், வட்டி தொகை மாதந்தோறும் ஊதியத்தில் இருந்து மாநகராட்சி கணக்கு பிரிவில் பிடித்தம் செய்யப்பட்டு, கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்தப்படும்.
இந்நிலையில், 2017-ம் ஆண்டு முதல் பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை, கூட்டுறவு கடன் சங்கத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் செலுத்தாமல் உள்ளதால், கடன் தொகையை அபராத வட்டியுடன உடனே செலுத்த வேண்டும் என பணியாளர்களுக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் வருகிறது.
இதன்படி, தற்போது பணியாற்றும் 263 பேரின் கடன் ரூ.3.16 கோடி, வட்டி ரூ.3.50 கோடி, ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 135 பேரின் கடன் ரூ.1.50 கோடி, வட்டி ரூ.64.40 லட்சம், உயிரிழந்த தொழிலாளர்கள் 85 பேரின் கடன் ரூ.1.05 கோடி, வட்டி ரூ.54.56 லட்சம் என மொத்தம் ரூ.10.12 கோடியை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளது. இதில், கூட்டுறவு சங்க அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. எனவே, இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் மீது மோசடி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.