திருச்சி: ஓய்வுபெறும் நாளில் திருச்சி பத்திர பதிவுத்துறை டிஐஜியை பணியிடை நீக்கம் செய்து, பதிவுத் துறை ஐ.ஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி பத்திர பதிவுத்துறையில் துணை மண்டல பதிவுத் துறைத் தலைவராக இருப்பவர் மதுரையை சேர்ந்த ராமசாமி(60). இவர் சார்பதிவாளராக பணியை தொடங்கி, பதிவுத் துறை டிஜஜி வரை வரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இதுவரை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை உறவினர் பெயரில் வாங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் மதுரையில் பலகோடி மதிப்புள்ள சொத்தை போலியாக பதிவு செய்ய துணைபோனதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த விவகாரத்தில் பதிவுத்துறை டிஐஜி ராமசாமி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து தலைமறைவான ராமசாமி, நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றார். மேலும் அவர் மீது மீண்டும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர், திருப்பூரில் பணியாற்றிய காலத்தில்தான் போலி ரசீது மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று, பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
ராமசாமி உட்பட18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இவர், தற்போது டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் ஓய்வு பெற இருந்தார். அதேநாளில் அவரை பணியிடை நீக்கம் செய்து, பதிவுத்துறை ஐ.ஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.