தேனி அருகே பாதை பிரச்சினையில் 2 பேர் வெட்டி கொலை: ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது


உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே வீட்டு பாதை பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் இரண்டு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரர் மற்றும் அவரது பெற்றோர் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர் (57). இவர் வீட்டின் எதிர்ப்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (60). இருவருக்கும் கடந்த ஓராண்டுகளாக இடப்பிரச்சினை இருந்து வந்தது. இது குறித்து இரண்டு குடும்பங்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் ராஜேந்திரனின் மகன் பார்த்திபன்( 31) ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று இரவு (மே1) இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பார்த்திபன் எதிர்வீட்டைச் சேர்ந்த சுந்தர் அவருடைய மனைவி சுதா(48), மாமனார் முத்துமாயன்(75) ஆகியோரை அரிவாளால் வெட்டினார். இதில் முத்துமாயன்(75) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த சுந்தர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். காயங்களுடன் சுதா உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர் பார்த்திபன், அவரது தந்தை ராஜேந்திரன் தாயார் விஜயா ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x