ராமநாதபுரம்: சொத்துக்காக நண்பர்களுடன் சேர்ந்து தந்தையைக் கொன்ற மகன் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே குயவனேந்தலைச் சேர்ந்தவர் காசிலிங்கம் (65). கிராமத் தலைவரான இவர் கடந்த 27-ம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் கருவேல மர காட்டுக்குள் கிடந்தார். திருப்பாலைக்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் காசிலிங்கத்தின் மகன் கண்ணன் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்ததால் அவரை பிடித்து விசாரணை செய்தனர். சொத்தை தனக்கு தராமல் தந்தை தனது சகோதரிக்கு கொடுத்ததால் திட்டமிட்டு நண்பர்களை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று நண்பர்களுக்கு மது வாங்கிக்கொடுத்து தந்தையை கண்ணன் கொலை செய்துள்ளார்.
பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தந்தையின் இறுதிச் சடங்கை செய்ததுடன், கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடம் புகார் தெரிவித்து நாடகம் ஆடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து கண்ணன் (35), இவரது நண்பரான விருதுநகர் மாவட்டம் அக்கனாபுரத்தைச் சேர்ந்த அழகு ஞானகுரு (35), மதுரை பசும்பொன் நகரைச் சேர்ந்த குமாரவேல் (28), பழங்காநத்தத்தைச் சேர்ந்த ராம்குமார் (37) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.