சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மின்னமலைபட்டி ஊராட்சி கள்ளங்கலம்பட்டியைச் சேர்ந்த விவசாய தம்பதி சுப்பிரமணி, கவிதா. இவர்களுக்கு திவ்யா (14), சிவரஞ்சனி (11) ஆகிய 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
வீட்டின் அருகே விவசாய பம்புசெட் மோட்டாரில் நேற்று மாலை மூவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் அறை மின்வயரில் ஈரத் துணி பட்டதில் திவ்யா, சிவரஞ்சனி ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த சிவரஞ்சனியை எஸ்.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். இதுகுறித்து உலகம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அருகேயுள்ள விவசாய பம்புசெட் மோட்டார்களில் இருந்து தான் தண்ணீர் எடுக்கிறோம். அதே நீரை தான் குளிக்க, துணி துவைக்க பயன்படுத்துகிறோம். முறையாக தண்ணீர் விநியோகம் செய்திருந்தால் இந்த குழந்தை உயிரிழந்திருக்காது. இனியாவது முறையாக தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.