ஈரோடு: சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம்மாள் (65). இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் கவிசங்கர் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டத்தில் தனியாக வசித்த பெற்றோரை கடந்த இரண்டு நாட்களாக மகன் கவிசங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று இரவு அக்கம்பக்கத்தினர், இவர்களின் வீட்டுக்குள் சென்று பார்த்த போது கணவன் ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், மனைவி பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட எஸ்.பி. சுஜாதா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் தங்க வளையல் உட்பட 15 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இச்சம்பவம் சிவகிரி சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.