பரமக்குடி: பரமக்குடி அருகே வீட்டிற்குள் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்த வயதான தம்பதியரின் உடல்களை கைப்பற்றி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி பகுதியான காட்டுப்பரமக்குடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் நாக சுப்பிரமணியன் (75). இவரது மனைவி தனலெட்சுமி (70). இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமான ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் வெளியூரில் வசிக்கிறார். மகனிடம் நாக சுப்பிரமணியனும், தனலெட்சுமியும் பேசிக் கொள்வதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடைசியாக இருவரும் மகள் புனிதாவிடம் மொபைல் போனில் பேசியுள்ளனர். அதன்பிறகு தொடர்ந்து மூன்று நாட்களாக அழைத்தும், மொபைல் போனை எடுக்காததால் இன்று தாய், தந்தையை பார்க்க புனிதா வந்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் இருந்து ரத்தம் கசிவதை பார்த்த அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் கதவை உடைத்து பார்த்தபோது, நாக சுப்பிரமணியன், தனலெட்சுமி ஆகியோர் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. அதனையடுத்து உடல்களை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். இதுகுறித்து பரமக்குடி நகர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். வயதான தம்பதியர் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். வயதான தம்பதிகள் இருவரையும் அக்கம், பக்கத்தினர் கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்த்துள்ளனர். அதன்பின் யாரும் அவர்களை பார்க்கவில்லை என கூறப்படுகிறது.