நாகை: வேதாரண்யம் வட்டத்துக்கு உட்பட்ட தோப்புத் துறை பகுதியைச் சேர்ந்தவர் முகமது கலிலூர் ரகுமான் (34). வாலிபால் பயிற்றுநராக உள்ளார். இவர், தன்னிடம் வாலிபால் பயிற்சி பெற்றுவந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மாணவி ஒருவரை போட்டிக்காக அடிக்கடி வெளியூருக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இதனிடையே, கலிலூர் ரகுமான் நடத்தையில் சந்தேகம் அடைந்த மாணவியின் பெற்றோர், வெளியூர் போட்டிகளுக்கு மாணவியை அனுப்ப மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, கலிலூர் ரகுமான் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையின் உதவி எண்ணான 1098-க்கு தொடர்புகொண்டு, நன்றாக விளையாடும் மாணவியை போட்டிக்கு அனுப்பாமல் பெற்றோர் துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், குழந்தை பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அந்த மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பயிற்சியாளர் மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, அந்த மாணவியிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கடந்த 7 மாதங்களாக பல்வேறு ஊர்களுக்கு போட்டி நடைபெறுவதாக அழைத்துச் சென்று, அந்த மாணவியை கலிலூர் ரகுமான் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கலிலூர் ரகுமானை நேற்று கைது செய்தனர். இவருக்கு ஏற்கெனவே 2 பெண்களுடன் திருமணம் ஆகி, அவர்கள் பிரிந்து சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.