காரைக்குடி டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசி விற்பனையாளர் கொலை: இளைஞருக்கு ஆயுள்


சிவகங்கை: காரைக்குடி அருகே அரசு மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசி விற்பனையாளரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

காரைக்குடி அருகே பள்ளத்தூரையைச் சேர்ந்தவர் ராஜ சேகரன் (48), மதுபோதையில் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். இதைப் பார்த்த அவரது மகன் ராஜேஷ் பாண்டி (23), பள்ளத்தூரில் அரசு மதுக்கடை இருப்பதால் தான் தனது தந்தை தொடர்ந்து மது அருந்துவதாக எண்ணினார். தொடர்ந்து அந்தக் கடையை மூட வைக்கத் திட்டமிட்டார். இதற்காக அவர், கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசினார். தீப்பற்றியதில் கடையில் இருந்த விற்பனையாளர் அர்ஜூனன் (46) படுகாயமடைந்தார்.

பணம், பொருட்கள் சேதமடைந்தன. காயமடைந்த அர்ஜூனன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பள்ளத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து ராஜேஷ் பாண்டியை கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அறிவொளி, குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் பாண்டிக்கு ஆயுள் தண்டனை, ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

x