கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே கருவில் உள்ள பாலினத்தைத் தெரிவித்து மருந்துக்குக் கடைக்கு சுகாதார அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம் அருகே மிட்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கொசமேட்டில் உள்ள தனியார் மருந்துக் கடையில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ரமேஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு பணியிலிருந்த போச்சம்பள்ளி அருகே திம்மநாயக்கனப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்தர் (45) மற்றும் உதவியாளர் குரு என்பவரும் அங்கிருந்து தப்பினர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து, கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்தது தெரியவந்தது. இதையடுத்து, மருந்துக் கடையை மூட்டி சீல் வைத்தனர். மேலும், இது தொடர்பான புகாரின் பேரில், காவேரிப் பட்டணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மருந்துக் கடையின் உரிமையாளர் பால முரளி (45) என்பவரைக் கைது செய்தனர்.