நாமக்கல்: திருச்செங்கோடு அருகே தனியார் மருத்துவமனை பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறியும், மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்தும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு அருகே சானார்பாளையத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (52). இவரது மனைவி கிருஷ்ண வேணி (48). இவர் கடந்த 28ம் தேதி இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு, திருச்செங்கோடு அருகே இளையாம் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு கிருஷ்ணவேனி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதை ஏற்க மறுத்த ஐயப்பன் மற்றும் அவரது உறவினர்கள் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஐயப்பன் உள்ளிட்டோர் கூறும்போது, “கிருஷ்ணவேணிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியபோது, மருத்துவர்கள் பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தினர். பின்னர் அவர் இறந்ததாகக் கூறு கின்றனர். எனவே மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மறியல் தொடரும்” என்றனர்.
இதையடுத்து போலீஸார் கூறும்போது, “நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் முன்னிலையில் கிருஷ்ண வேணியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படும். மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தவறு நடந்திருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தனர்.
இதையேற்று, மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இது தொடர்பாக திருச்செங்கோடு ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.