பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நாகை இளைஞர் கைது


நாகை: பிரதமர் அலுவலகத்துக்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நாகை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, மத்திய புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தியபோது, நாகையில் இருந்து பேசிய நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, நாகையில் செயல்படும் மத்திய உளவுப் பிரிவு மூலம், உள்ளூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து நாகை எஸ்.பி. அருண் கபிலன் உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி ராமச் சந்திர மூர்த்தி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, நாகை வெளிப்பாளையம் ராமநாயகன் குள தெருவைச் சேர்ந்த செ.கணேஷ் குமார் (33) என்பவர்தான் தனது செல்போனில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கணேஷ் குமாரை கைது செய்து, நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் நடத்திய விசாரணையில், கணேஷ் குமார் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி, மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும், அவரது மனைவி குழந்தையுடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார் என்பதும், இதனால், தனியாக வசித்து வந்த அவர், மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

எனினும், எதற்காக அவர் பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், நாகையிலிருந்து பிரதமர் அலுவலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x