திருச்சி: திருவெறும்பூர் அருகேயுள்ள திருவேங்கட நகரைச் சேர்ந்தவர் தனக்கொடி மகன் முத்துக் குமார் (38). பெல் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவரும், பெல் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றும் நண்பரும் குடும்ப ரீதியாக பழகி வந்துள்ளனர்.
இதனிடையே, கடந்தாண்டு நண்பர் வீட்டுக்குச் சென்ற முத்துக்குமார், நண்பரின் மனைவி தனியாக இருப்பதைப் பயன்படுத்தி, அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, அப்பெண் மயங்கிய பிறகு அவரை ஆபாசமாக தனது செல்போனில் படம், வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை வைத்து நண்பரின் மனைவியை அடிக்கடி முத்துக்குமார் மிரட்டி வந்துள்ளார்.
இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், முத்துக்குமார் ஏற்கெனவே ஒரு பெண்ணை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டி, பிரச்சினையாகி, சமாதானமாக பேசி முடித்ததும், பல பெண்களையும் முத்துக்குமார் தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் முத்துக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.