தஞ்சை அருகே அதிமுக பிரமுகரின் வீட்டில் நாட்டு வெடி வீச்சு: போலீஸார் தீவிர விசாரணை


தஞ்சை: திருக்காட்டுப்பள்ளி அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் நள்ளிரவில் நாட்டு வெடியை வீசிச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(45). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு 12.30 மணி அளவில் ஜன்னல் பகுதியில் திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.

இதையடுத்து, பாலமுருகன் மற்றும் குடும்பத்தினர் எழுந்து வந்து பார்த்தபோது, அங்கிருந்து 2 பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதைக் கண்டனர். அப்போது, வெடிச் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அந்த நபர்களை பிடிப்பதற்குள் அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்த தகவலின் பேரில் திருக்காட்டுப் பள்ளி போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மின்சாரத்தை துண்டித்து விட்டு, பாலமுருகன் வீட்டு ஜன்னல் மீது நாட்டு வெடியை வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. முன் விரோதம் காரணமாக, இந்த நாட்டு வெடி வீச்சு சம்பவம் நிகழ்ந்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என திருக்காட்டுப் பள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிச் சத்தத்தால் தனது காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

x