திருப்பூர்: மடத்துக்குளத்தை அடுத்துள்ள செங்கண்டிபுதூர் என்ற பகுதியில் காவலர் உடையில் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அவ்வழியாக வந்த குமரேசன் என்பவரை நிறுத்தி அந்நபர் சோதனை செய்தார். அவர் மீது குமரேசன் சந்தேகம் அடைந்து, அந்நபரை வீடியோ எடுத்தார். அப்போது, அந்நபர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால், அந்நபரின் காவலர் அடையாள அட்டையை குமரேன் கேட்டார்.
அப்போது, அந்நபர் ஓர் அடையாள அட்டையை காண்பித்தார். அதில், ‘ராதா கிருஷ்ணன், காவலர், கோவை மாவட்டம்’ என அச்சிடப்பட்டிருந்தது. குமரேசன் சந்தேகமடைந்த நிலையில், அந்நபர் அங்கிருந்து கிளம்பினார். இது குறித்து மடத்துக்குளம் போலீஸாரிடம் குமரேசன் புகார் அளித்தார்.
விசாரணையில், கோவையில் காவலராக பணியாற்றி பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால், பணியில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப் பட்ட ராதா கிருஷ்ணன் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டு, பணம் வசூல் செய்தது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.