தமிழகம் போல் புதுச்சேரியிலும் என்கவுன்ட்டர் தேவை - பாஜக எம்எல்ஏ ஜான்குமார்


புதுச்சேரி: தமிழகம் போல் புதுச்சேரியிலும் என்கவுன்ட்டர் தேவை என்றும் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லாதது குறித்து பிரதமர், மத்திய அமைச்சரிடம் புகார் தெரிவிக்கவுள்ளதாகவும் பாஜக எம்எல்ஏ ஜான்குமார் தெரிவித்தார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி உள்ளது. இந்த ஆட்சியில் உள்துறை அமைச்சராக பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் உள்ளார். தற்போது ஜான்குமாரின் ஆதரவாளரான பாஜக பிரமுகர் உமாசங்கர் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் 12 பேர் கைதாகியுள்ளனர்.

இந்நிலையில் புதுவை பாஜக எம்எல்ஏவும் முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான ஜான்குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: புதுவையில் பாஜக பிரமுகர் கொலை வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வலியுறுத்தி இருந்தேன். தற்போது சமீபகாலமாக துணைநிலை ஆளுநர் மாளிகை, முதல்வர் ரங்கசாமி வீடு ஆகியவற்றுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியான முறையில் இல்லை. மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளேன்.

இது தொடர்பாக பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன். முதல்வர், ஆளுநர் இல்லங்களுக்கே வெடிகுண்டு மிரட்டல் என்பதை ஏற்க முடியவில்லை. புதுவையில் மிக மோசமான குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது என்கவுன்ட்டர் போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். புதுவையில் சட்ட ஒழுங்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே தமிழகத்தில் என்கவுன்ட்டர் நடப்பது போல் புதுவையிலும் கடும் நடவடிக்கை தேவை.

உத்தரப் பிரதேசத்திலும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து தெரிவிக்க உள்ளேன். புதுவையில் என்கவுன்ட்டரை கொண்டு வர வேண்டும்.

இதற்குரிய அதிகாரத்தை புதுவை அரசுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும். பல வழக்குகளில் குற்றவாளிகள் வெளியே வந்து விடுகின்றனர். பாஜக பிரமுகர் கொலைக்கான உள்காரணம் என்ன என தெரியவேண்டும். பாஜக பிரமுகர் கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார்.

x