குடும்பத்தகராறில் மூன்றரை வயது சிறுமி கொலை: ராணிப்பேட்டை பெண்ணுக்கு ஆயுள் தண்டனை


ராணிப்பேட்டை: செட்டித்தாங்கல் பகுதியில் முன்விரோதம் காரணமாக மைத்துனர் மகளான சிறுமியை கிணற்றில் வீசி கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் செட்டித்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (47). இவரது மனைவி ராஜேஸ்வரி (45). தம்பதியருக்கு தனுஷ் (13) மற்றும் மூன்றரை வயது மகள் கோபிகா ஆகியோர் உள்ளனர். காந்தியின் சகோதரர் சேட்டு. இவரது மனைவி புஷ்ப ராணி (48). இந்நிலையில், ராஜேஸ்வரி மற்றும் புஷ்ப ராணிக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி சிறுமி கோபிகா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்குச் சென்ற புஷ்பராணி சிறுமியைக் கிணற்றில் தள்ளி கொலை செய்தார். இது குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் புஷ்ப ராணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சிறுமியைக் கடத்திய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் புஷ்ப ராணியை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

x