திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே பாணாம்பட்டு கிராமத்தில் குடிநீர்த் தொட்டி சிமென்ட் திட்டு மீது மனித கழிவை பூசிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எர்ணாமங்கலம் ஊராட்சி பாணாம்பட்டு கிராமத்தில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டி உள்ளது. இதில் கிராம மக்கள் குடிநீர் பிடித்துச் செல்கின்றனர். இந்நிலையில் குடிநீர்த் தொட்டியின் சிமென்ட் திட்டுமீது மனித கழிவு பூசப்பட்டிருப்பது நேற்று காலை தெரியவந்தது. இதனைப் பார்த்து, குடிநீர் பிடிக்க வந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள், குடிநீர் பிடிக்காமல் திரும்பினர்.
இது குறித்து கலசப்பாக்கம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்களும் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினரும் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட பிரச்சினை எதிரொலியாக, இந்நிகழ்வு நடந்திருக்கலாம் என காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில், சந்தேகத்தில் பேரில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டி அருகே வசிக்கும் சுந்தர மூர்த்தி மனைவி அஞ்சலா (50) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், தனது வீட்டின் அருகே சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் பிடித்து துணிகளைத் துவைப்பதால், தனது வீட்டின் முன்பு தண்ணீர் தேங்கி விடுவதாகவும், இதனால் குடிநீர்த் தொட்டியை அகற்ற வேண்டும் என்பதற்காக, நள்ளிரவில் மனித கழிவைப் பூசியதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் கலசப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அஞ்சலாவை கைது செய்தனர்.