ராசிபுரம்: போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (28). இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மங்களபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசோக்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அசோக் குமார் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட பேளுக்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸாருக்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி ராஜேஸ் கண்ணன் பாராட்டு தெரிவித்தார்.