வாழப்பாடி அருகே 2 குழந்தைகளை செப்டிக் டேங்கில் வீசி கொன்ற தாய் கைது: கூடா நட்பால் கொடூரம்!


சேலம்: வாழப்பாடி அருகே 2 குழந்தைகளை செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்த தாயை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள அத்தனூர்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி விஜயகுமார் (35). இவரது மனைவி இளவரசி (32). இவர்களது மகன்கள் விக்னேஷ் (6), சதீஷ்குமார் (3). நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள செப்டிக் டேங்கில் சிறுவர்கள் இருவரும் மூழ்கிய நிலையில் கிடந்தனர்.

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 குழந்தைகளும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இளவரசிக்கும் அருகே வசிக்கும் இளைஞருக்கும் கூடா நட்பு இருந்துள்ளது. இதையறிந்த விஜய குமார் மனைவியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவர் மீதான ஆத்திரத்தில் குழந்தைகளை செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்த இளவரசி தானும் அதில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார் இளவரசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x