ராமநாதபுரம்: போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.56 லட்சத்தை பறிமுதல் செய்து, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் 2 ஒப்பந்ததாரர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வசூலிப்பதாக, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் நேற்று மாலை போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) திருநாவுக்கரசு மேசையில் இருந்து ரூ.1.50 லட்சம் மற்றும் அலுவலக வரந்தாவில் வெளியே நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரர்களின் வாகனங்களில் இருந்து ரூ.1.06 லட்சம் என கணக்கில் வராத ரூ.2.56 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் 2 ஒப்பந்ததாரர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.