ராமேசுவரம்: வழக்குப் பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கிய தனுஷ்கோடி காவல் நிலைய போலீஸார் 3 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ராமேசுவரம் தீவில் இயங்கி வந்த 11 மதுக்கடைகளில் 9 மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டன. 2 மதுக் கடைகள் மட்டும் ராமேசுவரம் அருகே பாம்பனில் இயங்கி வருகின்றன. ராமேசுவரத்தில் மதுக்கடைகள் இல்லாததால் சட்ட விரோதமாக மது பாட்டில்களை வாங்கி வந்து சிலர் ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கூடுதல் விலை விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் சொந்தத் தேவைக்காக மது பாட்டில் சிலவற்றை வாங்கி வந்துள்ளார். இதற்காக வழக்குப் பதியாமல் இருக்க தனுஷ்கோடி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிவுறுத்தியபடி ரசாயனம் தடவிய பணத்தை தனுஷ்கோடி காவல் நிலையத்தில் உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர் கனக சபாபதி, காவலர்கள் முத்து கருப்பையா, மாரி ஆகியோரிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர். அவரிடம் இருந்து சார்பு ஆய்வாளர் கனக சபாபதி, காவலர்கள் முத்து கருப்பையா, மாரி ஆகியோர் லஞ்சப் பணத்தை பெற்ற போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் மூவரையும் கைது செய்தனர்.