கடலூர்: இரு சிறுமிகளை பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுத்திய பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளை கடந்த 2014ம் ஆண்டு சிலர் கடத்திச் சென்றனர். ஒரு வாரத்துக்குப் பின் அந்த சிறுமிகள் வீடு திரும்பினர். அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே பெற்றோர் அவர்களிடம் விசாரித்த போது, சிறுமிகளை கடத்தி சென்ற நபர்கள், பல்வேறு இடங்களில் தங்க வைத்து, அவர்களை தவறான பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸாரின் தொடர் விசாரணையில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (39) மற்றும் அவரது மனைவி தமிழரசி (39) ஆகியோர் உட்பட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு, சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி மற்று ஜெபினா ஆகியோர் தலைமறைவாயினர். 2019-ம் ஆண்டு, கடலூர் மகளிர் நீதிமன்றம் தப்பியோடிய மூன்று பேரைத் தவிர 16 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, அவர்களுக்கு சிறை தண்டனை விதித்தது.
பின்னர் முக்கிய குற்றவாளிகளான சதீஷ்குமார், தமிழரசியை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் நீதிமன்றம் அவர்களுக்கு சிறை தண்டனை விதித்தது. இதற்கிடையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நம்மாழ்வார் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் விசாரணை நடந்து கொண்டிருந்த போது உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர்.
இதையடுத்து தப்பியோடிய ஜெபினா (40) என்பவரை 2024ம் ஆண்டு சிபிசிஐடி போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பளித்தார். அதில் ஜெபினா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து ஜெபினாவை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.