திருநெல்வேலி: நாங்குநேரி வட்டத்தில் பணிபுரிந்த சாத்தூரை சேர்ந்த துணை வணிகவரி அலுவலர் மற்றும் அவரது மனைவிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் ஜி.ஜெயபாலன். இவரது மனைவி ஜி.கோமதி ஜெயம். கடந்த 2005-2006ம் ஆண்டு காலகட்டத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்ட துணை வணிகவரி அலுவலராக ஜெயபாலன் பணியாற்றி வந்தார். அப்போது நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரத்தில் இயங்கிவந்த தனியார் நிறுவனத்தின் வணிகவரி வரி மதிப்பை திருத்துவது தொடர்பாக, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான திருவனந்தபுரத்தை சேர்ந்த அசோக் குமார் என்பவர், திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். ஜெயபாலன் லஞ்சமாக பணம் பெற்றபோது அவரை கையும் களவுமாக போலீஸார் பிடித்தனர்.
பின்னர், சாத்தூரில் உள்ள ஜெயபாலன் வீட்டில் நடத்திய சோதனையின் போது, அவரது மனைவி கோமதி ஜெயம் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கியிருந்தது தெரியவந்தது. இது தொடர் பாக, விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்து ஜெயபாலன், அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளின் விசாரணையும் திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து, ஜெயபாலன் மற்றும் அவரது மனைவியை குற்றவாளி என்று அறிவித்து, நாங்குநேரி வட்டத்தில் பணியின் போது லஞ்சம் பெற்ற வழக்கில் ஜெயபாலனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயபாலன் மற்றும் அவரது மனைவிக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும், இந்த இரு வழக்குகளிலும் ஜெயபாலனுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், அவரது மனைவிக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜெயபாலனுக்கு இரு வழக்குகளிலும் விதிக்கப்பட்ட தண்டனை யை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.