திருச்சியில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்தவர் கைது: இயந்திரங்கள் பறிமுதல்


திருச்சி மாவட்டம் மருதாண்டாக்குறிச்சி, ஆளவந்தான் நல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பி.அனி பவுல் ராஜ் (50). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர், கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, 89391 46100 என்ற திருச்சி மாவட்ட எஸ்.பி. உதவி எண்ணுக்கு வரப் பெற்ற புகாரின் பேரில், மாவட்ட எஸ்.பி. செல்வ நாக ரத்தினம் உத்தரவின் பேரில், எஸ்.ஐ. வேலழகன் தலைமையிலான தனிப்படையினர் அனி பவுல் ராஜை கண்காணித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, கள்ள ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்டதாக அனி பவுல் ராஜை அவரது வீட்டருகே மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, அவரை சோதனை செய்த போது ரூ.500 கள்ள ரூபாய் நோட்டுகள் 4 எண்ணிக்கையில் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரது வீட்டில் சோதனை நடத்தி கலர் பிரிண்டர், ஸ்மார்ட் போன், இங்க் பாட்டில்கள், காகிதங்கள், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து மல்லியம்பத்து விஏஓ அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அனி பவுல் ராஜை கைது செய்தனர்.

x