திண்டுக்கல்: பட்டா மாறுதலுக்காக விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள பண்ணைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மகேஸ்வரன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டா மாறுதல் செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜக்கரியாவை அணுகினார். பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மகேஸ்வரன், இது குறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
பின்னர், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ஏற்பாட்டின்படி, ரசாயனப் பவுடர் தடவிய 2,500 ரூபாய் நோட்டுகளை நேற்று காலை சிலுவத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த விஏஓ முகமது ஜக்கரியாவிடம் மகேஸ்வரன் கொடுத்த போது, டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் முகமது ஜக்கரியாவைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.